கடன் தீர்ப்பவர்
சிவனை அழைக்காமல் பார்வதியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் பங்கேற்றார். இதனால் சிவ நிந்தனைக்கு ஆளானார். இதற்கு பரிகாரம் தேடி பல சிவத்தலங்களில் வழிபட்டார்.  இதில் சாரபரமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இங்குள்ள சுவாமி அம்மன் மீது சூரியன் பூஜிக்கும் விதத்தில் [ பிப்ரவரி  25,26,27 மூன்று நாட்கள் மட்டும் ] சூரிய ஒளி விழுகிறது.  சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக படுவது குறிப்பிடத்தக்கது   அப்போது சூரிய பூஜை சிறப்பாக நடக்கும்  இதைத் தரிசித்தவர்கள் நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம். சேற்றூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் காலப்போக்கில் சேறை என்றானது. தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற ஊர் என்னும் பொருளில் வள நகர் என வழங்கப்படுகிறது.
சிறப்பம்சம்
மூல்வர் சாரபரமேஸ்வரர்  சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடப்புறம் அம்பிகை ஞானவல்லி அம்மனுக்கு சன்னிதி உள்ளது.  நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை அருள்பவர் என்பதால் செந்நெறியப்பர் என்றும் அதற்குரிய ஞானத்தை அருள்பவளாக அம்பிகை இருப்பதால் ஞானவல்லி என்றும் பெயர் பெற்றனர்.
கடன் தீர்ப்பவர்
என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய முனிவர் கோவிலின் உள்பிரகாரத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவருக்கு  ரிணவிமோசன லிங்கேஸ்வரர்  என்று பெயர்.  இதற்கு கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் என பொருள்.  பணக்கடன் மட்டுமல்ல பிறவிக்கடனில் இருந்தே விமோசனம் தருபவராக அருள்கிறார்.  ஆரோக்கியம் அழகு அறிவு கல்விச்செல்வம் என எல்லாம் இருந்தும் வறுமையில் சிக்கினால் வாழ்வு சுகமாக அமையாது. அந்த வறுமையை போக்கி நல்வாழ்வு அளிக்கும் ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தீரும்.  செல்வ வளம் பெருகும்.
மூன்று துர்க்கை
பிரகாரத்தில் வினாயகர் நடராஜர் ரிஷபாரூடர்  தட்சிணாமூர்த்தி கால பைரவர் துர்க்கை சூரியன் சனீஸ்வர்ர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.  மார்க்கண்டேயரும் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ரிண விமோசன லிங்கேஸ்வரரும்  பாலசுப்ரமணியர் ஆகியோரும் மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர்.  சிவ துர்கை   வைஷ்ணவி துர்கை  விஷ்ணு துர்கை என மூன்று துர்கை சன்னதிகள் இங்கிருப்பது குறிப்பிட தக்கது.   குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இத்தலத்தில் அபூர்வமான மாவிலங்கை மரம் தல விருட்சமாக உள்ளது.  ஆண்டின் நான்கு மாதத்தில் மரம் முழுவதும் இலையாகவும்  அடுத்த நான்கு மாதம் வெள்ளை நிறப்பூக்களாகவும் அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ இலை எதுவுமில்லாமலும் இது காணப்படும்.
பாடல் பெற்ற பைரவர்
இங்குள்ள பைரவர் மீது திரு நாவுக்கரசர் தேவாரப் பாடல் பாடியுள்ளார்.
விரித்தபல் கதிர்கொள்
சூலம் வெடிபடு தமருங்கை
தரித்த்தோர் கோலே கால
பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு
வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே
என்பது அந்தப் பாடல். இந்த பைரவரின் இடது மேற்கையில் சூலம் போட்ட மணி இருப்பது மாறுபட்ட அமைப்பு இவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் வடைமாலை சாத்தி அர்ச்சனை செய்தால் கிரக தோஷம் நீங்கும்
இருப்பிடம்
கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ